Ad Widget

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி ஏப்ரல் 18முதல் சொந்த இடத்தில்!

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மிக விரைவில் சொந்த இடங்களில் இயங்கும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் 2 ஆம் தவணை முதல் இந்தப் பாடசாலைகளை சொந்த இடங்களில் இயக்குவதற்கு கல்வித்திணைக்களமும், பாடசாலைகளின் நிர்வாகத்தினரும் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடேஸ்வராக் கல்லூரியின் பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பல கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. கனிஷ்ர வித்தியாலயத்தின் கட்டடங்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்படவில்லை.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நடேஸ்வராக் கல்லூரி உட்பட 109 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த 12ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவற்றைக் கையளித்திருந்தார்.

இரு பாடசாலைகளும் தமது சொந்த கட்டடங்களில் இயங்குவதற்கான இதர வசதிகளை செய்து கொடுப்பதற்கு இராணுவத்தினரும் முன்வந்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக தற்காலிக இடத்தில் சுமார் 200 மாணவர்களுடன் இயங்கிவரும் இரு பாடசாலைகளும் தமது சொந்த கட்டடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts