தனது பயன்பாட்டிற்காக காங்கேசன்துறை பகுதியில் ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் அது சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்காக அமைக்கப்பட்ட கட்டிடம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
1980ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகை ஒன்று யாழ்ப்பாணம் கோட்டையில் அமைந்துள்ளது என்பதை நினைவூட்டுகிறேன்.
அது இன்னும் மீள்நிர்மாணம் செய்யப்படவில்லை.
காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வருவது, ஜனாதிபதி செயலகத்திற்கு கீழ் வரும், சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்காக அமைக்கப்பட்ட கட்டிடம்.
இந்த நிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்பட்டமை கடற்படையினரிடம்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், தாமரைத் தடாகம் போன்றனவும் ஜனாதிபதி செயலகத்தினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
காங்கேசன்துறை, அருகம்பை ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படுவது, ஜனாதிபதி மாளிகைகள் அல்ல, சர்வதேச மாநாட்டு மண்டபங்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.