Ad Widget

கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவு விநியோகத்தில் சுன்னாகம் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் முறைகேடு : இரண்டு பணியாளர்கள் இடைநிறுத்தம்

கர்ப்பிணித் தாய்;மார்களுக்கு வழங்கவேண்டிய போசாக்கு உணவுப்பொருட்களுக்குப் பதிலாக சவர்க்காரம், சலவைச் சோடாத்தூள் (சேர்வ் எக்செல்), சீனி, பிஸ்கற் போன்றவை வழங்கப்பட்டது நிரூபணமாகியுள்ளதையடுத்து சங்கத்தின் பொது முகாமையாளரையும், கிளை முகாமையாளரையும் பதவியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாகக் கூட்டுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தச் செய்திக்குறிப்பில்,

‘கர்ப்பிணிகளுக்கான போசாக்கு உணவு வழங்கலில் அதிருப்தி – சுன்னாகம் ப.நோ.கூட்டுறவுச் சங்கம் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் பயனாளிகள்’ என்ற தலைப்பில் 05.08.2015 ‘உதயன்’ பத்திரிகையிலும்,’கற்பவதித் தாய்மாருக்கான நிவாரணம் உரிய முறையில் கிடைப்பதில்லை – பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு’ என்ற தலைப்பில் 06.08.2015 ‘தினக்குரல்’ பத்திரிகையிலும் செய்திகள் வெளியாகி இருந்தது.

வெளியான பத்திரிகைச் செய்திகள் கூட்டுறவு அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து உடனடியாகக் கூட்டுறவுத் திணைக்களத்தின் ஊடாக முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்க வேண்டிய போசாக்கு உணவுப் பட்டியலில் உள்ள நெத்தலி, தகரத்தில் அடைத்த மீன் உணவு போன்றவற்றுக்குப் பதிலாக சவர்க்காரம், சலவைச் சோடாத்தூள் (சேர்வ் எக்செல்), சீனி, பிஸ்கற் போன்றவை வழங்கப்பட்டது நிரூபணமாகியுள்ளது. அத்தோடு பற்றுச்சீட்டில் வழங்கப்பட்ட இந்தப் பொருட்களின் விபரங்களைக் குறிப்பிடாமல் நெத்தலி, தகரத்தில் அடைத்த மீன் போன்றவற்றை வழங்கியதாகக் குறிப்பிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மாரின் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் முகமாக மகளிர் விவகார அமைச்சால் மாதந்தோறும் 2000 ரூபா பெறுமதியான போசாக்கு உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வுணவுப் பொருட்கள் கூட்டுறவுச் சங்கங்களின் மேம்பாடு கருதி, அரசாங்க அதிபரின் ஒத்துழைப்புடன் வடக்கு மாகாணம் முழுவதிலும் கூட்டுறவுச் சங்கங்களினூடாகவே விநியோகிக்கப்படுகிறது.

எல்லாக் கூட்டுறவுச் சங்கங்களும் தமக்குள்ள பொறுப்புகளை உணர்ந்து பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 9 வகையான உணவுப் பொருட்களை நேர்த்தியான முறையில் விநியோகித்து வருகின்றனர்.

இந்நிலையில்,சுன்னாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இத்தகைய முறைகேடு நடந்திருப்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாததும், ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

முதற்கட்ட விசாரணையில் பயனாளிகளின் முறைப்பாட்டின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டதையடுத்து உரிய பொருட்களை விநியோகம் செய்யத் தவறிய காரணத்துக்காகச் சங்கத்தின் பொது முகாமையாளரையும், கிளை முகாமையாளரையும் உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கி கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் சட்டவிதிகளுக்கு அமைய ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ளுமாறுகூட்டுறவுத் திணைக்களத்தால் சுன்னாகம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் நெறியாளர் குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து 22.08.2015 ஆம் திகதி கூடிய சங்கத்தின் நெறியாளர்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி சங்கத்தின் பொது முகாமையாளரும்,கிளை முகாமையாளரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பாக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts