Ad Widget

கரப்பந்தாட்டத்தில் யாழ்.மாவட்ட அணிகள் சம்பியன்

beach-volley-ball-ejaffnaவடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வடமாகாண மாவட்டங்களுக்கிடையில் நடத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவுகளிலும் யாழ்ப்பாண மாவட்ட அணிகள் சம்பியனாகின.

மேற்படி சுற்றுப்போட்டி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்றன.

ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட அணியும் யாழ்ப்பாண மாவட்ட அணியும் மோதின.
5 சுற்றுக்களாக கொண்ட இந்தச் சுற்றுப்போட்டியில் பலம் பொருந்திய யாழ்.மாவட்ட அணி மூன்று சுற்றுக்களுடன் வெற்றியினைத் தனதாக்கியது.

அந்தவகையில், யாழ்.மாவட்ட அணி 25:20, 25:21 மற்றும் 25:15 என்ற புள்ளிகள் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட அணியினை வீழ்த்திச் சம்பியனாகியது. இதன்மூலம் தொடர்ந்து 7 ஆவது முறையாக யாழ்.மாவட்ட அணி சம்பியனாகியது.

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் யாழ்.மாவட்ட அணியும் முல்லைத்தீவு மாவட்ட அணியும் மோதிக்கொண்டன.

இந்தப் போட்டியும் 5 சுற்றுக்களை கொண்டதாக அமையப்பெற முதல் இரண்டு சுற்றுக்களையும் 25:11, 25:25 என்ற ரீதியில் யாழ்.மாவட்ட அணி கைப்பற்றி இலகுவான வெற்றியினைப் பெறும் முனைப்புடன் இருந்தது.

இருந்தும் மூன்றாவது சுற்றில் விஸ்வரூபம் எடுத்த முல்லை அணி, 25:22, 25:23 என்ற புள்ளிகள் அடிப்படையில் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றினைக் கைப்பற்றி யாழ்.மாவட்ட அணியினை கதிகலங்க வைத்தது.

தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடிய ஐந்தாவது சுற்றில் சுதாகரித்தாடிய யாழ்.மாவட்ட அணி 15:13 என்ற புள்ளிகள் (இறுதிச் சுற்று 15 புள்ளிகளுடன் முடிவடையும்) அடிப்படையில் வென்று மாகாணச் சம்பியனாகியது.

இதன்மூலம் யாழ்.மாவட்ட இரண்டு அணிகளும் தேசிய மட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதியினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts