நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், றெக்ஷிசனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞன் ஆகியோரினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார்.
மேற்படி வழக்கு இன்று (20) ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கமலேந்திரன் சார்பாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகாதபடியால், கமலேந்திரனை ஏப்ரல் 03 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் 3 ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததுடன், றெக்ஷிசனின் மனைவி ஊர்காவற்றுறைப் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இருவரும் நீதிமன்றத்தினால் 8 தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கமலேந்திரனை ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து நீக்குவதாக ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம ஜெயந்தவினால் கடந்த 6 ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
ஐ.ம.சு.மு.விலிருந்து கமலேந்திரன் நீக்கம்
கமலேந்திரனை வைத்து கட்சியை குற்றம் சுமத்துவது பொருத்தமற்றது – டக்ளஸ்
எதிர்க்கட்சித்தலைவர் பதவியை துறக்க வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்