Ad Widget

கமலேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் நேற்று புதன்கிழமை (30) உத்தரவிட்டார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றொக்ஷிசனின் கொலையின் பிரதான குற்றவாளி எனும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரனின் வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை (30) ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த வழக்குத் தொடர்பான புலன் விசாரணைகளினை தாம் முன்னெடுத்து வருவது தொடர்பான அறிக்கையினை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

அதன்போது, கந்தசாமி கமலேந்திரன் மற்றும் டானியல் றொக்ஷிசனின் மனைவி மற்றும் இளைஞர் ஆகியோரை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் 3 ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர். அத்துடன் றெக்ஷிசனின் மனைவி மற்றும் மேலும் ஒரு இளைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts