Ad Widget

கனிமொழியுடன் பேசிய பிறகே எழிலன் சரணடைந்தாராம்! – அனந்தி சாட்சியம்

இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளருமான எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் வியாழன்று சாட்சியமளித்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சிரேஸ்ட மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். இந்த வழக்கு விசாரணை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் – விடுதலைப் புலிகள் இராணுவத்தினரிடம் சரணடையும் நிகழ்வானது சர்வதேச ஏற்பாட்டில் இடம்பெற்றது என்றும், குறிப்பாக இந்தியாவும் இதில் பங்கெடுத்திருந்தது என்றும் அனந்தி சசிதரன் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டார்.

தனது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு முன்னர், அன்றைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் சரணவடைவது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் எனவும் அதை அருகில் இருந்து தான் கேட்டார் எனவும் அனந்தி தனது சாட்சியத்தில் தெரிவித்தார் என்று சட்டத்தரணி ரட்னணல் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின்போது, அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தையடுத்து, இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கு ஒன்றை அவருடைய மனைவி அனந்தி சசிதரன் தாக்கல் செய்திருக்கின்றார்.

அந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் வவுனியா மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது அவர் சாட்சியமளித்தார். இராணுவத்தினரிடம் விடுதலைப்புலிகள் சரணடைந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இடம்பெற்ற காரணத்தினால், அந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி அவை தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் முறையீட்டு நீதிமன்றம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய, ஐந்து மனுக்கள் தொடர்பான விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன. அவற்றில் எழிலன் தொடர்பான வழக்கு விசாரணையில் அவருடைய மனைவி அனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகின்ற நாட்களில் எல்லாம், வழக்காளியாகிய அனந்தி சசிதரனும், ஏனைய மனுதாரர்களும் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளதாகவும், குறிப்பாக அனந்தி சசிதரனுக்கு எதிராக வழக்கு நடைபெறும் தினங்களில் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அப்பால், அனந்தி சசிதரனுக்கு பெயர் குறிப்பிட்டு அச்சுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், சட்டத்தரணி ரட்ணவேல் நீதவானிடம் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து அனந்தி சசிதரனுக்கு பதுகாப்பு வழங்குவத்கான உத்தரவை நீதிபதி வழங்கினார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Posts