Ad Widget

கந்தபுராண கலாசாரமாக விளங்கிய யாழ். மண் இப்பொழுது காடையர்களின் விளைநிலமாகியது!

கந்த புராணக் கலாசாரத்தைக் கொண்ட யாழ். மண் இன்று காடையரின் அராஜகத்தின் விளைநிலமாகி வாள் வெட்டுக் கலாசாரத்தின் சொந்தமாகிவிட்டது என அகில இலங்கை இந்துமா மன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை இந்துமா மன்றம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“யாழ்ப்பாணத்தின் இளம் சமுதாயத்தை சீர்கெட்ட பாதையிலிருந்து சீர்திருத்தப் பாதைக்கு கொண்டு வருவதற்கு அறநெறி போதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக பாடசாலைகள், ஆலயங்களில் சிவதொண்டர் அணிகளை உருவாக்கி வருகின்றோம்.

இதுவரை அவ்வாறு சிவதொண்டர் அணிகளை உருவாக்காதவர்கள் அதனை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கந்த புராணக் கலாசாரத்தைக் கொண்ட யாழ். மண் இன்று காடையரின் அராஜகத்தின் விளைநிலமாகி வாள் வெட்டுக் கலாசாரத்தின் சொந்தமாகிவிட்டது.இதனைக் கட்டுப்படுத்தி எமது இளம் சமுதாயத்தைச் சீர்திருத்துவது எமது எல்லோரதும் கடமையாகும்.

அந்த வழியில் இந்துமா மன்றம் சகல மக்களுக்கும் அறநெறியைப் போதிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.இதற்காக பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் இந்து சமய நிறுவனங்களில் சிவதொண்டர்அணிகளை உருவாக்கி வருகின்றோம்.

இந்த நடவடிக்கைகளை மேலும் விரிவாக்குவதன் மூலம் இளம் சமுதாயத்தை சமயப்பற்றுள்ள ஒழுக்க சீலர்களாக உருவாக்க முடியுமென்றநம்பிக்கை எமக்குள்ளது.

இதுவரை சிவதொண்டர் அணிகளை உருவாக்காத பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் இந்து மதஅமைப்புக்கள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென நாம் விநயமாகக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

சகல பாடசாலை அதிபர்கள், ஆலயங்களின் பரிபாலன சபையினர், பெற்றோர், நலன்விரும்பிகள் யாவரும் இதை ஒரு சேவையாகக் கருதும் அதேநேரம் தமது கடமையென்றஉணர்வோடும் சிவ தொண்டர் அணியை உருவாக்க முன்வர வேண்டும்.

இது எமக்கு மட்டுமல்லஎமது சமுதாயத்துக்கும் முக்கியமாக இளம் சந்ததியினருக்கும் செய்யும் தொண்டாகஎண்ணிச் செயற்படுவோம் என்றுள்ளது.

Related Posts