Ad Widget

கட்டுவனில் மற்றுமொரு கிணற்றிலும் எண்ணெய் கசிவு

சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தற்போது கட்டுவன் பகுதியிலுள்ள வள்ளுவன் சனசமூக நிலைய பொதுக்கிணற்றுக்கும் பரவியுள்ளதாக பாதிக்கப்பட்ட சனசமூக நிலைய அங்கத்தவர்கள், தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்கு செவ்வாய்க்கிழமை (02) தெரியப்படுத்தியுள்ளனர்.

சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால் சுற்றாடலிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு தென்பட்டது.

அருகிலிருந்து கிணறுகளுக்கு ஏற்பட்ட எண்ணெய் கசிவுகள் தற்போது, மின் பிறப்பாக்கி அமைந்துள்ள வளாகத்தை சூழவுள்ள 5 கிலோமீற்றர் தூரத்துக்கு பரவியுள்ளது.

இது தொடர்பில் தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி உட்பட பாதிக்கப்பட்ட 11 பேரும் தனித்தனியான வழக்குகளை நொர்தேன் பவர் நிறுவனம், மற்றும் உத்துரு ஜனனி திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் பதிவு செய்து அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், மின்சார நிலைய வளாகத்திலிருந்து சுமார் 6 கிலோமீற்றருக்கும் அப்பால் இருக்கும் கட்டுவன் பகுதிக்கும் எண்ணெய் கசிவு பரவ தொடங்கியுள்ளது.

ஏற்கனவே கட்டுவன் ஜே – 238 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள இரண்டு கிணறுகளில் பரவிய எண்ணெய் கசிவு தற்போது, ஜே – 239 பகுதியிலுள்ள சனசமூக நிலைய பொதுக்கிணற்றுக்கும் பரவியுள்ளது.

இது தொடர்பாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமாரிடம் கேட்டபொழுது,

எண்ணெய் கசிவு பரவியமை தொடர்பில் அப்பகுதிக்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகரை பாதிக்கப்பட்ட கிணற்றை பார்வையிட அனுப்பி அறிக்கை பெற்றுள்ளதுடன், கிணற்றுக்குள் எண்ணெய் கசிவுகளின் படிவுகள் காணப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Posts