Ad Widget

கடும் நிபந்தனைகளுடன் இரு மாணவர்களுக்கு பிணை! யாழ். மேல் நீதிமன்றம் வழங்கியது!!

பிரபல கல்லூரி மாணவர்கள் இருவருக்குக் கடும் நிபந்தனையில் பிணை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள் மீண்டும் குற்றம் செய்தால் மேல் நீதிமன்றத்தைக் கேட்காமலேயே பிணையை ரத்துச் செய்ய மல்லாகம் நீதிமன்றத்திற்கு விசேட அனுமதி அளித்துள்ளார்.

தெருவில் ரவுடித் தனத்தில் ஈடுபட்டு, மாணவிகளுக்குத் தொல்லைகொடுத்தனர், தனியார் கல்வி நிலையத்தை சேதப்படுத்தினர், என்ற குற்றச்சாட்டுக்களில் கைதானோருள் பிரபல கல்லூரிகளின் இரு மாணவர்களும் இருந்தனர்.

இவர்களுக்கு மல்லாகம் நீதிமன்று 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இவர்கள் வரும் ஓகஸ்ட் மாதம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதால் யாழ் மேல் நீதிமன்றில் பிணை மனு கோரியிருந்தனர் இது தொடர்பான விசாரணை நேற்று நடந்தது. இவர்களுக்கு முற்குற்றம் இல்லை என்பதாலும் அவர்களுக்கு எதிராக வேறு வழக்குகள் எதுவும் இல்லை என்பதாலும் அவர்களை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல நீதிபதி இளஞ்செழியன் அனுமதித்தார்.

பிணையில் இருக்கும் காலத்தில் இவர்கள் இருவரும் ஏதாவது ஒரு குற்றம் புரிந்து, அது தொடர்பாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டால் மேல் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை ரத்துச் செய்யுமாறு மல்லாகம் நீதவானுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விசேட அனுமதி வழங்கி கட்டளை பிறப்பித்துள்ளார்.

மேலும் மாணவர்களை இரண்டு ஆள்பிணையில் செல்ல உத்தரவிட்ட நீதிபதி ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் காலை 9 மணிக்கு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்று பணித்துள்ளார்.

Related Posts