யாழ். வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அத்துமீறி தங்கியிருக்கும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பான கடற்றொழில் அமைச்சரின் உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து யாழ். மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமைச்சரின் உத்தரவு ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிக்கும் செயலா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவித்த மக்கள், ”கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்சா வடக்கில் தங்கியிருக்கும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு பொலிஸாருக்கும், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், அவரது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று தினங்களாகின்ற நிலையிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஜனாதிபதியின் யாழ். வருகையை கண்டித்து மீனவர்கள் கருப்புக் கொடி போராட்டத்திற்கு தயாராகி வந்த நிலையிலேயே அமைச்சரின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சரின் உத்தரவானது ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் செயலா என்பது தொடர்பாக தற்போது சந்தேகம் எழுந்துள்ளது” எனக் குறிப்பிட்டனர்.