Ad Widget

கடற்தொழில் அமைப்புக்களின் பேரணியில் மாவைக்கு எதிர்ப்பு! பேரணியில் கலந்து கொள்ளாது திரும்பி சென்றார்!!

வடமராட்சி கிழக்கில் அத்துமீறித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு வருகை தந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கடற்தொழில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் நேற்று (திங்கட்கிழமை) பேரணி ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அங்கு மாவை சேனாதிராஜாவும் வருகை தந்திருந்தார்.

இதன்போது சமாச அலுவலகத்திற்குச் சென்று சமாசப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிக் கொண்டிருக்கையில் வெளியில் நின்ற மீனவர்கள் இங்கு அரசியல்வாதிகள் வேண்டாம் என்றும் மாவை சேனாதிராஜாவை வெளியேற்ற வேண்டுமெனவும் கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து மாவை சேனாதிராசாவும் அலுவலகத்திலிருந்து வெளியேறியதுடன், பேரணியில் கலந்து கொள்ளாது சென்றுள்ளார்.

இதேவேளை மாவை சேனாதிராசாவைத் திட்டமிட்டு வெளியேற்றவில்லை என்றும் விரும்பத்தகாத வகையில் நடைபெற்ற அந்த சம்பவத்திற்கு தாம் வருந்துவதாகவும் கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts