Ad Widget

கடந்த அரசின் பாவங்களைப் புதிய அரசு சுமக்க வேண்டிய நிலை -ரணில்

கடந்தகால அரசாங்கத்தின் பாவத்தைச் சுமக்க வேண்டிய நிலை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (06.11.2015)நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் உரிய கேள்விப் பத்திரங்கள் இன்றி ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களை அவ்வாறே தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐ.ம.சு.மு எம்.பியான டலஸ் அழகப்பெரும, மலையக நெடுஞ்சாலை தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மலையக நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சீன நிறுவனம் ஒன் றுக்கு கேள்விப்பத்திரம் இன்றி இதனை அமைக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது.

குறித்த நிறுவனத்துடன் மேற்கொள்ளப் பட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாயின் நஷ்டஈடு வழங்கவேண்டும். எனவே கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தத்துக்கு அமைய பணிகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

இருந்தபோதும் குறித்த நிறுவனத்துக்கு வழங்காத ஏனைய பகுதிகளை உள்ளூர் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியும் பெறப்பட்டிருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் பாவங்களையும் சுமக்கவேண்டிய நிலைமை தற்போதைய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபை முதல் வருமான லக்ஷக்மன் கிரியல்ல, மத்திய நெடுஞ்சாலை முன்னைய அரசாங்கத்தைவிட குறைந்த வட்டி வீதத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும், இதுவே தமக்கும் முன்னைய அரசாங்கத்துக்கும் இடையிலான வித்தியாசம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts