Ad Widget

கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தர மாட்டோம்-எல்லை தாண்டினால் சுட்டுக் கொல்வோம் – ரணில்

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம், எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மிரட்டியுள்ளார்.

ranil

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இந்திய-இலங்கை உறவை, சீன-இலங்கை உறவில் இருந்து வேறுபடுத்தியே வைத்திருக்கிறோம். இரண்டும் எங்களுக்கு முக்கியமானவை.

இந்தியாவுடன் எங்களுக்கு வரலாற்று உறவு உள்ளது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் வரும் எந்த ஒரு செயலையும், மற்ற நாடு செய்யாது என்று பரஸ்பரம் முடிவு செய்திருக்கிறோம்.

எனவே சீனாவுடனான உறவிலோ, இதர நாடுகளுடனான உறவிலோ இந்த ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு தான் செயல்படுகிறோம். ஆனால் ராஜபக்சே ஆட்சியில் என்ன நடந்தது என்றால் சீனாவை மிரட்ட இந்தியாவின் பெயரையும், இந்தியாவை மிரட்ட சீனாவின் பெயரையும் பயன்படுத்தினார்.

இது விவேகமற்ற கொள்கை. இந்தியா எங்களுக்கு உதவி செய்தது. இந்திய உதவி இல்லாமல், ராஜபக்சேவால் புலிகளை அழித்திருக்க முடியாது. இந்திய உதவிகளை பெற்றுக் கொண்டவர், 13-வது சட்ட திருத்ததை அமல்படுத்தி, பின் அதற்கும் மேலே சலுகைகளை அளிப்பதாக வாக்களித்தார்.

ஆனால் அதை நிறைவேற்றவில்லை. தமிழக-இலங்கை மீனவர்களிடையிலான பிரச்சினையை பேசித்தீர்க்க வேண்டும். இந்திய மீனவர்கள் இழுவை மடி வலைகள் கொண்டு மீன் பிடிப்பதை அனுமதிக்க முடியாது. இது இலங்கையின் கடல் பரப்பு.

இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் இப்படி மீன்பிடித்தால் என்ன செய்திருப்பீர்கள்? நாங்கள் உங்கள் பரப்பில் மீன் பிடிக்க வேண்டும், அதுவும் இழுவை மடிகளை பயன்படுத்தி மீன் பிடிக்கவேண்டும் என்று கேட்கிறீர்கள்.

கச்சத்தீவு உடன்படிக்கை ஏற்பட்ட காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட படகு வகைகளை நீங்கள் பயன்படுத்தினால்.. நாங்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமைப் பகுதிகள் குறித்து பரிசீலிப்போம்.. இரு நாட்டு மீனவர்களுக்கிடையில் திருமண பந்தங்கள் உண்டு… அவர்கள் இந்த பிரச்சினையை பேசித்தான் தீர்க்க வேண்டும்.

இது எங்கள் வடக்கு மீனவர்களின் மீன்பிடி பகுதி.. கச்சத்தீவு இலங்கையின் பகுதி. இந்திய அரசும் அது இலங்கைக்கு சொந்தம் என்றே கருதுகிறது. இது தமிழக அரசியலில் ஒரு பகுதி என்பது எனக்கு நன்கு தெரியும்.

மீனவர் விவகாரத்தை பொறுத்தவரை, இது எங்கள் வடக்கு மீனவர்களின் பாரம்பரிய உரிமையை சார்ந்தது. எங்கள் தெற்கு பகுதி மீனவர்கள் கூட, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மீனவர்கள் வந்து இழுவை மூலம் மீன் பிடிப்பதாக கூறுகின்றனர். இது எங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இது எங்கள் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை. கச்சத்தீவை நாங்கள் விட்டுத்தரப்போவதுமில்லை, இந்தியா இதை எழுப்பப்போவதுமில்லை. இந்தியா இதை எழுப்பாது.

எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுடுவதில் எந்த மனிதஉரிமை மீறலும் இல்லை இதற்கு சட்டத்தில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனது வீட்டை உடைத்துக்கொண்டு யாராவது உள்ளே நுழைய முயன்றால் என்னால் அவரை சுட முடியும். சட்டம் அதனை அனுமதிக்கிறது. இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

Related Posts