Ad Widget

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவரிடம் கப்பம் கோரியவர்களுக்கு விளக்கமறியல்

குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண் சாயலை ஒத்த ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரையும் அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோப் பதிவு செய்து, அதனை அவர்களிடம் காண்பித்து கப்பம் கோரி மிரட்டிய பிறிதொரு இளைஞரையும் யாழ். நீதவான் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர்.

குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண் சாயலை ஒத்த ஆணை, பாசையூர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர்களுடன் நாவாந்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் சென்றுள்ளார்.

இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை நாவாந்துறை இளைஞர் அதனை வீடியோப் பதிவு செய்துள்ளார். வீடியோ எடுத்த பின்னர் அதனை இணையத்தில் பதிவு செய்யவுள்ளதாகவும் அவ்வாறு செய்யாது விடவேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் கப்பம் தரவேண்டும் என பெண் சாயலை ஒத்த இளைஞனிடம் நாவாந்துறை இளைஞன் கோரியுள்ளார்.

இது தொடர்பாக பெண் சாயலை ஒத்த நபர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 10 ஆயிரம் கப்பம் தருவதாகக்கூறி கப்பம் கோரியவரை ஒரு இடத்துக்கு வருமாறு யாழ்ப்பாணப் பொலிஸார் பெண் சாயல் நபரிடம் கூறியதையடுத்து, கப்பம் கோரியவர் அங்கு வரவே அவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரு நபர்களும் யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியதாக பொலிஸார் கூறினர். கூடவே பெண் சாயல் நபருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட நபரும் கைது செய்யப்பட்டார். பெண் சாயல் நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts