Ad Widget

ஒப்பந்த நிறுவனங்களுக்கு எதிராக 38 முறைப்பாடுகள் பதிவு

complaint-boxமிகப்பெரிய ஒப்பந்த நிறுவனங்களுக்கு எதிராக 38 முறைப்பாடுகள் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதித்தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டிட வேலைகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய ஒப்பந்த நிறுவனங்கள் உப ஒப்பந்த நிறுவனங்களிடம் தமது வேலைகளை ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட வேலைகள் மேற்கொள்வதற்கான எழுத்து மூல ஆவணங்கள் இன்றி வேலைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அதற்குரிய பணத்தினை ஒப்பந்த நிறுவனங்கள் உப ஒப்பந்த நிறுவனங்களுக்கு செலுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டியே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில் 12 ஒப்பந்த நிறுவனங்களுக்கு எதிராகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் 18 ஒப்பந்த நிறுவனங்களுக்கு எதிராகவும், வவுனியா மாவட்டத்தில் 8 ஒப்பந்த நிறுவனங்களுக்கு எதிராகவும் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு எழுத்து மூல ஆவணங்கள் இன்றி ஒப்பந்தங்களை கையளித்த ஒப்பந்த நிறுவனங்களுக்கு எதிராக தொழில் திணைக்களத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எனவே, இவ்வாறு மிகப்பெரிய ஒப்பந்த நிறுவனங்களிடம், ஒப்பந்தத்தினை மேற்கொள்ளும் உப ஒப்பந்த நிறுவனங்கள் எழுத்து மூல ஆவணங்கள் இன்றி எதிர்காலத்தில் ஒப்பந்தத்தினை மேற்கொள்ள வேண்டாமென்றும், ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் போது அதிக கவனம் செலுத்துமாறும் வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் உப ஒப்பந்தக்காரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts