ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலக சிரேஸ்ட பிரதி செயலாளர் அன்டன் பெரேரா தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஒக்டோபர் 13ஆம் திகதி காலை 10.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இவற்றுக்குரிய முன்னாயத்தங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பான விளக்கங்களை ஜனாதிபதிக்கு எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் இந்த கலந்துரையாடலின்போது அறிவுறுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.