Ad Widget

ஐ.நா மனித உரிமை பேரவையின் ஜுன் அமர்வு நிகழ்ச்சி நிரலில் இலங்கை

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போர்க்குற்றம் உள்ளிட்ட மனித உரிமை மீறல் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இன்னும் உறுதியான வடிவத்தை வெளியிடாததனால் இந்த விடயம் குறித்த நிகழ்ச்சி நிரலில் காணப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் வருடாந்த வரைவு வேலைத்திட்டத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெறவுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இம்மாநாட்டின் 30ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பான மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வாய்மூல மேம்படுத்தல் விளக்கமளிப்பு இடம்பெறவிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதன் பரிந்துரைகளின் அமுலாக்கம் தொடர்பில் 32ஆவது அமர்வில் வாய்மூல மேம்படுத்தல் தெளிவுபடுத்தல் ஒன்றையும், 34ஆவது அமர்வில் விரிவான அறிக்கை ஒன்றையும் சமர்பிக்குமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரப்பட்டுள்ளது.

அதன் பிரகாரமே எதிர்வரும் ஜுன் மாதம் அமர்வில் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளகப் பொறிமுறை உருவாக்கப்பட்டு மார்ச் மாதமளவில் அதனை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வு அடுத்த ஜுன் 13ஆம் திகதி தொடக்கம் யூலை முதலாம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts