ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக சுமந்திரன் தெரிவு

ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாக பணியாற்றக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு நாள் கருத்தாடல் அமர்வு கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நேபாளத்தில் இடம்பெற்றது.

இந்த அமர்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.

தென்னாசிய பிராந்தியத்தில் திடீரெனப் பிணக்குகள் உருவாகுகின்றபோது, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதிகளாக அவற்றைக் கையாளும் தகுதியுடையோரை ஐ.நா. செயலாளர் நாயகம் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆப்கானில்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், மாலைதீவு, இலங்கை, பூட்டான் உட்பட பத்து நாடுகளில் இருந்து சுமார் 25 பிரமுகர்களை ஐ.நா. செயலாளர் நாயகம் தமது பிரதிநிதி அந்தஸ்துடன் தெரிவு செய்துள்ளார். அவர்களுக்கான கருத்தாடல் அமர்வே தற்போது நேபாளத்தில் இடம்பெற்று வருகின்றது.

இலங்கையிலிருந்து எம்.ஏ.சுமந்திரனும், முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் பிரசாத் காரியவசமும் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தேவைப்படும் அவசர வேளையில் தமது பிரதிநிதியாகச் செயற்படுவதற்குரிய பிரமுகர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ராதிகா குமாரசுவாமியும் இந்தக் கருத்தாடல் அமர்வில் பங்குபற்றுகின்றார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தால் இப்பொறுப்புக்குப் பெயர் குறிப்பிட்டுத் தெரிவு செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் இராஜதந்திரிகளும் சர்வதேச சமூக செயற்பாட்டாளர்களுமே உள்ளடங்குகின்றனர்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நேபாளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருமே இப்பொறுப்புக்காக அழைக்கப்பட்ட இரண்டு அரசியல்வாதிகளென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts