Ad Widget

ஐபிஎல் அறிமுக தொடரிலேயே வெற்றியாளர் கிண்ணத்தை சுவீகரித்த குஜராத் டைட்டன்ஸ்!

அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் அணி ஐபிஎல் வெற்றியாளர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் போட்டியிட்டன.

இந்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சம்சன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இதன்படி ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்களை எடுத்தது.

குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தலைவர் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ஒட்டங்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து 131 ஓட்ட இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.

இதன்படி, இறுதியில் குஜராத் அணி 18.1 ஓவர்களில் 133 ஓட்டங்களை எடுத்தநிலையில், 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் வெற்றியாளர் பட்டத்தை சுவீகரித்தது.

இதேவேளை இந்த ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் அதிக ஓட்டம் பெற்றவர்களுக்கான செம்மஞ்சள் நிற தொப்பியை ஏற்கனவே வைத்து இருக்கும் ஜோஸ் பட்லர் நேற்றைய போட்டியில் புதிய சாதனை படைத்தார்.

ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றவர்களுக்கான வீரர்கள் பட்டியலில் டேவிட் வோர்னரை பின்னுக்கு தள்ளி பட்லர் 2-வது இடத்தை பிடித்தார்.

நேற்றைய போட்டிக்கு முன்னர் வரை 824 ஒடடங்களை எடுத்திருந்த பட்லர் நேற்றைய போட்டியில் 25 ஓட்டங்களை எடுத்தபோது வோர்னரின் சாதனையை முறியடித்தார்.

Related Posts