வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் எங்களது தாயகமாக அங்கீகரிக்கப்பட்டு ஏனைய இனங்களைப் போல் சகல உரிமைகளுடனும் தமிழர்கள் வாழ வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்கத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த போது ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்காக நியாயமான போராட்டங்களைச் செய்திருக்கின்றேன்.
எமது ஆயுதப்போராட்டம் 2009 ஆம் ஆண்டுடன் நசுக்கப்பட்ட பின்பு தனித்தமிழீழ கோரிக்கை பலவீனப்பட்ட நிலையில் இருக்கின்றது.
இலங்கைத் தீவில் ஏனைய மக்களுடன் சரியான உரிமைகளுடன் ஒரு சுய நிர்ணய உரிமையுடைய தேசிய இனமாக தமிழர்கள் அங்கீகரிக்கப்பட்டு வாழ வேண்டும். ஏனைய இனங்களைப் போல் எல்லா உரிமையும் கொண்டு வாழ வேண்டும்.
எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கவில்லை. இன்றைய சூழ்நிலை என்னை அரசியலில் ஈடுபடத் தள்ளிவிட்டிருக்கின்றது.
எமது அரசியல்வாதிகள், எம்மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளுவோர் எமது உறவுகள் செய்த தியாகத்தை மறந்து செயற்படுகின்றார்கள்.
இந்நிலை தொடருமானால், நாமும் காலப்போக்கில் சிங்களவர்களோடு சேர்ந்து ஒரு இனமாகிவிடுவோம். தமிழர்கள் என்ற தனித்துவம் இருக்காது’ என்றார்.