Ad Widget

எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – பேருந்து கட்டணங்களும் முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 5 ரூபாயால் அதிகரிக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டி கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, கடந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் எரிபொருள் விலைகள் அதிகரித்தபோது முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது பயணிகளுடன் கலந்துரையாடி கட்டணத்தை தீர்மானிக்குமாறு முச்சக்கரவண்டி நடத்துனர்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தற்போது அந்த பேச்சுவார்த்தை நடத்துவது கடினமான சூழ்நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே முச்சக்கரவண்டித் தொழிலை நிலைநிறுத்தும் நோக்கில் முதல் கிலோமீட்டரின் கட்டணத்தை 100 ரூபாயாகவும் இரண்டாவது கிலோமீற்றர் பயணக் கட்டணத்தை 80 ரூபாயாகவும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts