Ad Widget

எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதாக வெளியான செய்தி குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்

எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக வழமையை விட அதிக பவுசர்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பன இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல முனையங்களும் , சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையமும் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.

சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளைப் போன்று எந்தவொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

முறையற்ற வகையில் எரிபொருள் விநியோகத்தை தவிர்ப்பதற்காகவே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் ஆலோசனையுடன் மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

தற்போது நாளாந்தம் இரு முனையங்களிலிருந்தும் சுமார் 4000 மெட்லிக் தொன் டீசலும் , 3000 மெட்ரிக் தொன் பெற்றோலும் விநியோகிக்கப்படுகிறது.

இது எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்ட காலத்தில் விநியோகிக்கப்பட்டதை விட அதிகமாகும். எனவே எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts