புலோலி, 1ஆம் கட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த தருமராசா லக்ஸ்மி (வயது 63) என்ற ஆசிரியையே சடலமாக மீட்கப்பட்டார்.
வீட்டில் தனித்து வசித்து வந்த மேற்படி முன்னால் ஆசிரியை, நேற்று சனிக்கிழமை (16) தொடக்கம் வீட்டை விட்டு வெளியில் வராததையடுத்து, சந்தேகம் கொண்ட அயலவர்கள் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது, ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.
இதனையடுத்து, வடமராட்சிப் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்டாயனின் உத்தரவிற்கமைய சடலம் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.