Ad Widget

எமது சமுதாயம் பல்வேறு வகையான பிறழ்வுகளினை எதிர்கொள்கின்றது – க.ஸ்ரீமோகனன்

எமது சமுதாயம் பல்வேறு வகையான பிறழ்வுகளை எதிர்கொண்டு வருகின்றது. எதிர்கால சமூகத்தினை வழிநடத்த வேண்டிய பொறுப்பு மாணவர்களின் கைகளில் உள்ளது. எனவே மாணவர்களாகிய இளம் சமுதாயத்தினர், சரியான முறையில் வழிநடத்தப்பட வேண்டும் என தெல்லிப்பளை பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன், சனிக்கிழமை (09) தெரிவித்தார்.

DSCF5325

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தெல்லிப்பளைப் பிரதேச செயலக வழிகாட்டலில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் ஒழுங்குபடுத்தலில் நடத்தப்படும் நாடகப்பயிற்சி பட்டறை நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (09) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களாகிய இளம் சமுதாயத்தினரை சரியான முறையில் வழிப்படுத்தவதற்கான ஊடகமாக நாடகக்கலை அமைந்து விளங்குகின்றது. மாணவர்களைச் சரியான வழியில் வழிநடாத்துவதற்கும் சமூகப் பயன்பாடுடையவர்களாக உருவாக்குவதற்க்கும் பல்வேறு வகையான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், சமூகத்தினை வழிநடத்தக்கூடிய சமூகப் பயன்பாடுடைய விடயங்களை எடுத்துரைக்கவல்ல ஊடகமாக விளங்குகின்ற நாடகக் கலையினை, இளம் சமூதாயத்தினரிடையே ஊட்டுவதன் ஊடாக சமூகப் பயன்பாடுடைய மாணவ சமூதாயத்தினையும் எதிர்காலத்திற்கு உரிய இளம் சமூதாயத்தினையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நாடகப் பயிற்சிப் பட்டறையானது ஒழுங்குபடுத்தகப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது.

இப்பயிற்சிப் பட்டறையினை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்களை வளப்படுத்திக் கொள்ளவேண்டும். சிறந்த வளவாளார்களைக் கொண்டு இப்பயிற்சிப்பட்டறையானது நடத்தப்படுகின்றது.

நாடகக்கலையானது கல்வியோடு இணைந்தவகையில் பயன்பாடுடைய ஊடகமாக விளங்குகின்றது. இதனூடாக சமூகத்தில் உள்ள பிறழ்வான விடயங்களில் இருந்து விடுபட்டு எதிர்காலத்தில் நல்ல சமூதாயத்தினை மாணவர்கள் உருவாக்கம் பெறச் செய்ய முடியும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts