Ad Widget

என்னை நீக்கியதை சட்டப்படி சந்திப்பேன்: சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது என்று கூறியிருப்பது விதிகளின் படி சரியானதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, அந்த கூட்டத்தின் வாயிலாக எங்களை நிரந்தரமாக நீக்கியிருக்கிறோம் என்று கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

தற்காலிக நீக்கம் செய்திருப்பதை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, நிரந்தர நீக்கம் என்று கூறுவது சட்டத்திற்கு உட்பட்டதல்ல.

என்னை இன்று தொடர்புகொண்டு தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட ரசிகர்களுக்கும் இயக்கத்தின் சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி.

அவர்களின் இந்த தன்னிச்சையான முடிவை சட்டத்தின் வாயிலாக நீதி மன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம்.

எனவே எனது அன்புக்கினிய ரசிகர்களும், தொண்டர்களும் எந்த ஒரு பதற்றமும் கொள்ளாமல் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

சரத்குமார் மனைவியும், நடிகையுமான ராதிகா இந்த முடிவை எதிர்த்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று(நேற்று) நடந்தது பொதுக்குழுவே அல்ல. இது(நிரந்தர நீக்கம்) சட்டப்படி செல்லாது என்று கூறியுள்ளார்.

Related Posts