Ad Widget

எனக்கு எதிரான சுவரொட்டிகள் உண்மைக்கு புறம்பானவை – விந்தன்

யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்திற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த துண்டுப்பிரசுரம் தொடர்பில் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

vinthan-kanakaraththinam

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உண்மைக்குப் புறம்பான வகையிலேயே என்னைப் பற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

1983ம் ஆண்டு வெலிக்கடை வெஞ்சிறையில் காடையர்களால் வஞ்சகமான முறையில் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்ட விடுதலை போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் உட்பட 53 பேர் கொல்லப்பட்ட 31ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் சர்வதேசங்களில் உள்ள எமது கட்சியின் மூத்த உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வும் கடந்த மாதம் ஜேர்மனியில் உள்ள டோட்மன்ட் நகரில் நடைபெற்றது.

இந்தநிகழ்வுகளுக்கு இலங்கையிலிருந்து நானும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் , வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா ஆகியோர் சென்றிருந்தோம்.

குறித்த நிகழ்வுகளுக்குப் பின்னர் அங்கு வசிக்கும் எமது கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளுக்குச் சென்ற போது எமது கட்சி உறுப்பினர்களது பிள்ளைகளையும் நாம் சந்திக்க நேரிட்டது.அவர்கள் அங்கு மாணவர்களாக உள்ளனர்.

எனவே குறித்த மாணவர்கள் வடபகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக என்னிடம் வினவிய போது நான் கூறினேன் ‘இலங்கையில் அரசாங்கத்தால் மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல் சீருடை போன்றவை வழங்கப்பட்டாலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களான அப்பியாசப்புத்தகங்கள், கொம்பாஸ், பேனா, பென்சில் உட்பட புத்தகப்பை, காலணி மற்றும் காலுறை போன்றவை கூட இல்லாமல் இருக்கும் வறிய மாணவர்கள் கல்வியில் மட்டுமல்ல உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டு பின்னடைவை சந்தித்து வருகின்றன என கூறினேன்.

மேலும் வன்னிப்பகுதியிலும் மாணவர்கள் அதிகமாக இதே நிலையில் இருப்பதாக தெரிவித்த அங்குள்ள மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நேரடியாக சில உதவிகளை செய்து வருவதாக கூறினர்.

அத்துடன் உங்களால் முடிந்தால் யாழ்ப்பாணத்திலுள்ள வறிய மாணவர்களின் விபரத்தை தந்துதவினால் அவர்களுக்கும் நேரடியாக உதவலாமென கூறினர்.

‘வடக்கு மாகாணத்திலே தற்பொழுது கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு இருக்கின்றது அவர்களின் அனுமதியுடன் அவர்களோடு இணைந்தே நீங்கள் இப்பணியை மேற்கொள்ளலாம் என்றும் நானும் அவர்களோடு இணைந்து ஒத்துழைப்பு தருகின்றேன்’ எனவும் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த விடயங்களை நான் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலும் பகிரங்கப்படுத்தி இருந்தேன். குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சருக்கும் நான் தெரியப்படுத்தியதோடு அவரும் இந்த விடயத்தை வரவேற்று பயனாளிகளாக இருக்கும் வறிய மாணவர்களுக்கு உதவி நேரடியாகவே கிடைக்கும்படி வழி செய்து இதை நாம் அமுல்படுத்தலாம் என கூறினார்.

அத்துடன் இது விடயமாக என்னை தனக்கு உத்தியோகபூர்வமாக ஒரு கடிதத்தையும் அனுப்பி வைக்குமாறும் பணித்திருந்தார். அதுமட்டுமல்ல நெடுந்தீவில் என்னுடன் ஒன்றாய் கல்வி கற்ற பாடசாலை நண்பனும் உறவினருமான ஒருவரிடமிருந்து ஏற்கனவே கிடைத்த நன்கொடை நிதி மூலம் யாழ் தீவுப்பகுதியிலுள்ள சில விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களுக்கு நிதி வழங்கினேன்.

மேலும் அங்குள்ள சில மருத்துவமனைகளுக்கு நிதி வழங்கவுள்ள விடயமும் நாட்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக யாழ் தீவுப்பகுதியில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியதால் வடக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஜங்கரநேசனும் நானும் இன்னும் சில மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து தீவகத்தின் சில பகுதிகளுக்கு பவுசர்கள் மூலம் தொடர்ச்சியாக குடிநீர் வழங்கி வரும் விடயம் ஏற்கனவே செய்தியாக வந்துள்ளது.

இந்தநிலையில் 23.08.2014 அன்று இரவு இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிள்களில் பசை வாளிகளுடன் கொச்சை தமிழில் பேசிக்கொண்டு எனக்கு எதிராக யாழ் நகரப்பகுதியில் கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகளை சிலர் ஒட்டித் திரிந்து இருக்கிறார்கள்.

அதில் ‘புலம்பெயர்ந்த மக்கள் தந்த நிதி எங்கே?’ என்ற தலைப்புடன் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் நான் ஏற்கனவே ஜேர்மன் , பிரான்ஸ் போன்ற நாடுகளிலுள்ள தமிழ் மக்களிடம் இங்கு கல்வி சீரான முறையில் இல்லை என கூறி முப்பத்து ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை பெற்றுள்ளதாக நான் கூறியதாக அப்பட்டமான பொய் ஒன்றை சுவரொட்டியில் குறிப்பிட்டதோடு அப்பணத்தினை இன்று வரை ஏழை மாணவருக்கு நான் வழங்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சுவரொட்டிக்கு உரிமை கோருபவர்களின் முழுப்பெயரையோ முகவரியையோ குறிப்பிடாமல் கடைசியில் கஷ்டப்படும் மாணவர்களின் பெற்றோர் என குறிப்பிட்டு ஆறு பேரின் பெயரை கற்பனையில் எழுதியுள்ளனர்.

வடபகுதியில் கல்வியையும் கலாச்சாரத்தையும் சீரழித்து விளையாட்டு நிகழ்வுகளில் பியர் ரின்களையும் வழங்கி மாணவர்கள் மத்தியிலே போதை வஸ்துகளை திணித்து சமூகத்தை சீரழிக்கும் நயவஞ்சக கூட்டத்திற்கும் கைக்கூலிகளாகி காட்டிகொடுக்கும் துரோகக் கூட்டங்களுக்கும் எம்மைப் போன்றவர்களின் மக்களுக்கான சேவையை ஜுரணிக்க முடியாமல் நன்கு திட்டமிட்டு குழப்புவதிலும் தடுப்பதிலும் குறியாய் இருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பும் எனது வீடு ஒரு முறை உடைக்கப்பட்டது வீட்டின் மீது போத்தல்கள் கழிவு ஒயில் போன்றவையும் வீசப்பட்டன.

ஒருமுறை துப்பாக்கியை கொண்டு சுட முயன்றார்கள் ஒருமுறை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள். இன்னுமொருமுறை யாழ் மாநகர சபைக்குள் ஆறு பேர் துப்பாக்கியுடன் நுழைந்து எம்மை அச்சுறுத்தினர். மற்றுமோர் முறை பொலிஸ் பாதுகாப்பையும் மீறி யாழ் மாநகர சபை கூட்ட மண்டபத்தின் உறுப்பினர்களின் மேசையில் எனக்கு எதிராக அநாமதேய துண்டுப்பிரசுரம் கூட வைத்தார்கள்.

இவற்றை எல்லாம் யார் செய்தார்கள் என அப்போதே ஆதாரத்துடன் நான் அம்பலப்படுத்தி விட்டேன். இந்தநிலையில் மீண்டும் என் மீது சேறு பூசும் விதமாக விசமப்பிரசாரத்தினை மேற்கொண்டு எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் அடிப்படையற்ற உண்மைக்கு புறம்பான சில குற்றச்சாட்டுகளை சுமத்தி யாழ் நகரப்பகுதியில் சுவரொட்டிகளையும் தீவுப்பகுதியில் துண்டுப்பிரசுரங்களை வீசிச்சென்றதாகவும் அறிகின்றோம்.

ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எனக்கூறி புலம்பெயர் மக்களிடமோ அல்லது அங்குள்ள அமைப்புக்களிடமோ முப்பத்து ஐந்து சதத்தையேனும் நான் வாங்கவில்லை என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளுக்கு விநயமாக தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

விந்தனுக்கு எதிராக யாழில். சுவரொட்டி

Related Posts