Ad Widget

எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் மக்கள் தேசியமாவீரர்களின் தியாகங்களுக்கு புறம்பாக செயற்படுகின்ற எவரோடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பேச்சு நடாத்தவோ அல்லது இணைந்து செயற்படவோ போவதில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை காலமும் திரை மறைவில் பதவிகளுக்கு போட்டி போடுவதை ஏற்கனவே நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தோம்.

தற்சமயம் இடம்பெறும் போட்டிகள், கட்சித்தாவல்கள் போன்றவற்றை மக்கள் தற்போது அறியும் போது இதுவரை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறி வந்த செய்தி உண்மையாக்கப்பட்டுள்ளது.

அந்த அதிகாரப் போட்டியில் தற்போது தமிழ்த் தேசியமக்கள் முன்னணியையும் இழுக்கப் பார்க்கிறார்கள்.

ஒரு புறத்தில் ரெலோவுடன் பேச்சுவார்த்தை ஈடுபடப் போவதாகவும் இன்னொரு பக்கத்திலே தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக போலித் தகவல்கள் பரப்பப்படுகின்றன.

நாம் ஒரு விடயத்தில், உறுதியாக உள்ளோம். கூட்டணி என்ற கதைக்கே இடம் கிடையாது கூட்டணி ஆகட்டும் தமிழரசு ஆகட்டும் ஒற்றையாட்சிக்கு ஆதரவளித்த கட்சிகள்.

மாறாக மாவீரர்களின் தியாகத்திற்கு புறம்பாக செயற்படும் எவரோடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பேச்சு நடத்தவோ இணைந்து செயற்படவோ போவதில்லை.

தமது போலி முகத்திரை கிழிக்கப்பட்டதும் அதற்குப் பரிகாரம் தேடும் வகையில் தமிழ்த் தேசிய முன்னணியில் இணைக்கப் பார்க்கின்றார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் பின் இக் கட்சிகள் ஒற்றையாட்சிக்கு ஆதரவளித்ததால் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கினோம்.

இவ்வாறு கடந்த கால வரலாறு இருக்கையில் அற்ப பதவிகளுக்காக ஒற்றை ஆட்சிக்குள்ளும் 13 ஆம் திருத்தத்திற்குள்ளும் தமிழ் மக்களை முடக்க முனைந்த எவருடனும் கூட்டு வைக்கமாட்டோம்.

எம் கூட்டு என்றும் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியப் பற்றாள்கள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுடனே என்றென்றும் இருக்கும்.

தமிழ் மக்களின் வாக்கைப் பெற்று தற்சமயம் பதவியிலுள்ளோர் அரசுடன் பேச்சுவார்த்தை எனும் போர்வையில் ஒற்றையாட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இவ்வாறு, இருக்கையில் எதிர்வரும் உள்ளூராட்ச்சித் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கும் வாக்குகளானது ஒற்றையாட்சிக்கு ஆதரவான வாக்குகளாக மாறிவிடுமோ என்ற அச்ச நிலை காணப்படுகின்றது.

எனவே ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை திணிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

எமது கூட்டு என்றும் தமிழ் மக்களுடனேயே அமையும் என்றும் சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்

Related Posts