Ad Widget

எதிர் மனுதாரர்களை மன்றில் ஆஜராக நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் வாகன விபத்தில் பாடசாலை மாணவன் மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு யாழ் நீதவான் பிணை வழங்க மறுத்ததையடுத்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மீளாய்வு மனுவை வெள்ளிக்கிழமை பரிசீலனை செய்தபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் கடந்த பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் பாடசாலை மாணவன் பார்த்திபன் சுபஸ்திக்கன் மரணமடைந்தார்.

அவருடைய தாயார் பலத்த காயத்திற்கு உள்ளாகினார். இந்த சம்பவத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திய சாரதி ஜெயபாலச்சந்திரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கைதியை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நிராகரித்து, அந்தக் கைதியைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

யாழ் நீதவான் நீதிமன்றத்தின் இந்தக் கட்டளையை எதிர்த்து சட்டத்தரணிகள் யாழ் மேல் நீதிமன்றத்தில் பிணை மீளாய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். நீதவான் நீதிமன்றத்தின் பிணை நிராகரிப்பு கட்டளையை ரத்துச் செய்து, விளக்கமறியல் கைதியான பாலச்சந்திரன் பிரகாஷை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் இந்த மனுவைத் தாக்கல் செய்த சட்டத்தரணிகள் மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தனர்.

அந்தப் பிணை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 03.02.2016 இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் ஒருவருக்கு விபத்து மரணத்தை ஏற்படுத்தியது, மற்றுமொருவருக்குக் காயத்தை ஏற்படுத்தியது மற்றும் போக்குவரத்து சட்ட விதிகளை மீறியமை என்பவற்றின் கீழ் தண்டனை சட்டக்கோவையின் விதிகளுக்கமைய கைது செய்யப்பட்ட பாலச்சந்திரன் பிரகாஷ~க்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் ஒரு விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற அடிப்படையில் நீதவான் நீதிமன்றில் விசாரணை நடைபெறுகின்ற இந்த வழக்கில் விளக்கமறியல் கைதியாகிய பிரகாஷை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி, நீதவான் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது.

கடந்த 11.02.2016 ஆம் திகதி நீதவான் முன்னிலையில் சந்தேக நபர் சார்பாக இந்தப் பிணை விண்ணப்பம் ஆதரிக்கப்பட்;ட போது, சம்பவத்தின் விளைவு காரணமாக இவ்விபத்தானது, திட்டமிட்ட கொலையாக இருக்கலாமா என்ற சந்தேகத்தில் விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெறுவதற்காக வழக்கு விசாரண கோவை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுவரையில் சட்டமா அதிபரிடமிருந்து உரிய அறிவுறுத்தல் எதுவும் வந்து சேரவில்லை. இதனால் கடந்த மூன்றரை மாதங்களாக சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய மனைவியும் குழந்தைகளும் பெரும் கஸ்டங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, காரணமின்றி பிணை விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிராகரித்தமையினால் இந்த வழக்கில் நீதிக்குப் பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே, மேல் நீதிமன்றில் இந்த மீளாய்வு மனு தாக்கல் செய்யப்படுகின்றது.

இந்த மனுவைப் பரிசீலனை செய்து நீதவானால் நிராகரிக்கப்பட்ட பிணை கட்டளையை ரத்துச் செய்து விளக்கமறியலில் உள்ள கைதிக்கு நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்க வேண்டும். அவ்வாறு பிணை வழங்கப்பட்டால், நீதிமன்றத்தினால் விதிக்கப்படுகின்ற சகல நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு சந்தேக நபர் நடப்பார் என அந்த பிணை மீளாய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிணை மீளாய்வு மனுவையும் சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தையும் பரிசீலித்த நீதிபதி இளஞ்செழியன், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் சட்டமா அதிபருக்கும் இந்த பிணை மீளாய்வு மனுவுக்கு பதிலளிக்குமாறு அறிவித்தல் வழங்கி, எதிர்வரும் 29.06.2016 ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

Related Posts