Ad Widget

‘எதிர்க்கட்சித் தலைவரை நான் தாக்கவில்லை’

எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை எவரேனும் கை நீட்டிக்  கதைக்க முடியுமா ? அவ்வாறு இருக்கையில் நான் எவ்வாறு மைக் வீசி  தாக்குவேன் என வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அந்த அமர்விலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியலை சாந்தி சிறிஸ்கந்தராசாவுக்கு வழங்கியமை தொடர்பில் நான் கடுமையான வாதத்தை முன் வைத்தேன்.

அப்போது கடுமையான கருத்து மோதல் இடம்பெற்றது. அப்போது ஒரு கட்டத்தில் நான் கோபமாக 'மைக்கை' மேசை மீது வைக்கும் போது அது கீழே வீழ்ந்து விட்டது.

அதனை சில இணைய  ஊடகங்கள் நான் எதிர்கட்சி தலைவர் மீது மைக்கை வீசித் தாக்கினேன். அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் என செய்தி வெளியிட்டுள்ளனர். அது முற்றிலும் பொய்.

எனது கட்சிக்குள் நான் கருத்து மோதலில் ஈடுபடுவேன். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மீது மைக் வீசி தாக்குகிற அளவுக்கு நான் செல்லவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் முன்பாக யாருமே கை நீட்டி பேச மாட்டார்கள். அவ்வாறு இருக்கையில் நான் எவ்வாறு மைக் வீசி  தாக்குவேன்” என தெரிவித்தார்.

Related Posts