விரைவான உலக செயற்பாட்டினால் தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்கள் அழிவடைந்து வருகின்றன. அதிலிருந்து மீண்டு எங்களுடைய அடுத்த சந்ததியினருக்கு எமது அடையாளங்களை காண்பிக்க வேண்டியது எமது கடமையாகும் என யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி.சிவநாதன் தெரிவித்தார்
சைவநெறிக் கூடமும் சைவ மகா சபை தெய்வத் தமிழ் அறக்கட்டளை நிதியமும் இணைந்து நடத்திய தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சைவ மகா சபையின் தலைவர் கலியுகவரதன் தலைமையில் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பஞ்சலிங்கம் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாங்கள் உறங்கிவிட்டால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம். எங்களைப் பாதுகாக்க சாத்தியப்பாடான வழிகளைச் சிந்திக்க வேண்டும். தமிழ் மொழியில் மந்திரங்கள் கூறி இறைவனுக்கு வணக்கம் செலுத்துவது என்பது காலத்தின் தேவையாகும். ஆரம்பத்தில் நாம் எமது மொழியிலேயே பூஜை ஆராதனைகளை மேற்கொண்டோம். சமூகப் புரட்சி, கல்விப் புரட்சி, சமயப் புரட்சி என எதுவானாலும் அவற்றுக்கு எதிராக சீர்திருத்தம் அவசியம். அவ்வாறான ஒரு தன்மை தான் தமிழ் மொழியில் மந்திர உச்சாடனம் செய்து இறைவனை ஆதாரிக்கும் முறையாகும்.
வருங்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டிய ஒரு கட்டாய தேவை இன்று எமக்கு ஏற்பட்டுள்ளது. எமது கலை, கலாசாரம் இன்று நேற்று உருவாக்கப்பட்டதல்ல. எமது மூதாதையர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் அவற்றை வகுத்துள்ளனர். விரைவான உலக செயற்பாட்டில் எமது அந்த அடையாளங்கள் அழிவடைந்து வருகின்றன. அதிலிருந்து மீண்டு எமது அடுத்த சந்ததியினருக்கு எமது அடையாளங்களை காண்பிக்க வேண்டும். எனவே நாம் உறங்கிவிட்டால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம். ஆகவே எம்மைப் பாதுகாக்க வேண்டும். அவற்றிற்கு இவ்வாறான தமிழ் அருட்சுனைஞர் பயிற்சிகள் மிகவும் அவசியமானவை. விளிம்பில் இருக்கும் நாம் விழுந்திடாமல் இருப்போம் என்றார்.
இந்தப் பயிற்சி நெறியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 36 பேர் பங்குபற்றியிருந்தனர். இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த செந்தமிழ் வேள்விச் சதுரர் சக்திவேல் முருகனார் தலைமையிலான விரிவுரையாளர்களால் இந்தப் பயிற்சி நெறி நடத்தப்பட்டது.வடக்கு, கிழக்கிலுள்ள ஏராளமான கிராமிய ஆலயங்கள் பூசை வழிபாடுகள் இன்றி இருக்கின்ற நிலையிலும் ஆலயங்களில் தமிழில் பூசைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை மேற்கிளம்பியுள்ளது. இந்நிலையிலும் மேற்படி தமிழ் அருட்சுனைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டு முதலாவது அணிக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட சக்திவேல் முருகனாரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டவர்களும் மேற்படி அருட்சுனைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.