Ad Widget

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதற்கான புதிய முறைமை அறிவித்தது ஜனாதிபதி செயலகம்

ஊரடங்கு அனுமதிப்பத்திரம் (Curfew Pass) வழங்குவதற்கு புதிய நடைமுறையை கொண்டு வருவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மாவட்ட மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அமைய ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரம் நான்கு முறைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகம், மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகரின் பிரிவு மற்றும் பொலிஸ் நிலையம் என நான்கு மட்டங்களில் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது என்று செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் அரசால் அவ்வப்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது.

அத்தகைய சந்தர்ப்பங்களில் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்காக அதிகளாவனவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் ஒன்றுகூடுவது கோரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெரும் தடையாகும்.

எனவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவினால் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும்.

பொலிஸ் தலைமை அலுவலகம், மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம், தொகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களின் ஊடாக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.

மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரும் 50 ஊழியர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் பொலிஸ் தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும்.

மேல் மாகாணம் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் கீழ் வரும் 50 ஊழியர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் வழங்கப்படும்.

மாகாணத்தின் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மேல் மாகாணத்தைத் தவிர்ந்த வடக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை வழங்கும்.

ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கும் 50 க்கும் குறைவான ஊழியர்களுக்கும் ஊரடங்கு அனுமதியை அந்தப் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் அலுவலம் வழங்கவுள்ளது.

ஒவ்வொரு பொலிஸ் நிலையப் பிரிவிலும் உள்ள 10 க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்கு அனுமதியை பொலிஸ் நிலையத்தால் வழங்கப்படும்.

மிகவும் மனிதாபிமான அடிப்படையில் தனிநபர்களுக்கு அனுமதி வழங்க பொலிஸ் நிலையங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்களுக்கான விண்ணப்பங்களை எந்த அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை ஏலவே உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார். அனுமதிப்பத்திரங்களுக்கு மிகவும் நியாயமான காரணத்துடன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், அதிகார சபைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தமது தொழில் அடையாள அட்டையினை ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும். எனினும் தொழில் நிமித்தமின்றி தமது ஊழியர் அடையாள அட்டையினை துஷ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் புதிய முறைமை உள்ளிட்ட சுற்றுநிருபத்தினை http://www.police.lk என்ற இணையத்தளத்திலும் அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளத்திலும் பார்வையிட முடியும் – என்றுள்ளது.

Related Posts