Ad Widget

உள்ளூர் சேவைகள் பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து செயற்படும்: முதலமைச்சர் உத்தரவு!

வவுனியாவின், உள்ளூர் பேரூந்து சேவைகளை பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து இரு வாரங்களுக்கு செயற்படுத்துவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வவுனியாவில் 195 மில்லியன் ரூபா பெறுமதியில் புதிய பேரூந்து நிலையமானது கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டு செயற்படாத நிலையில் காணப்பட்டிருந்தது.

இந் நிலையில் போக்குவரத்து அமைச்சராக வட மாகாண முதலமைச்சர் பெறுப்பேற்றதன் பின்னர் புதிய பேரூந்து நிலையத்தினை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததன் பிரகாரம் 25 ஆம் திகதியில் இருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் சேவையில் ஈடுபடவேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் பழைய பேரூந்து நிலையத்தினை மூடுவதற்கான ஏற்பாடுகள் 24 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியில் இருந்து எடுக்குமாறும் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

தனியார் பேரூந்து உரிமையாளர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்த நிலையிலும் வர்த்தகர் சங்கத்தின் கருத்தை ஏற்று உள்ளுர் சேவையினை பழைய பேரூந்து நிலையமான இ.போ.ச பேரூந்துகள் சேவையில் ஈடுபடும் இடத்தில் இருந்து முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்து தருமாறு இணைந்து கேட்டுக்கொண்டனர்.

இதற்கான கால அவகாசமாக நாளை காலை 10 மணி வரை வழங்கப்பட்ட நிலையில் செயலாளார் உள்ளடங்கிய குழு உடனடியாக முதலமைச்சருடன் கலந்துரையாடி பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட தனியாருக்கு இடம் ஒதுக்கி கொடுக்கப்படும் என தனியார் பேரூந்து உரிமையளார்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகளை வவுனியா நகரசபையின் செயலாளர் முன்னெடுக்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related Posts