Ad Widget

உரிமைக்காக போராடி மடிந்தவர்களை நினைவு கூறும் உரிமை உண்டு

‘எமது உரிமைகளுக்காகப் போராடி மடிந்தவர்களை நினைவு கூறும் உரிமை, எமக்கு உண்டு. அதனை, கடந்தகால அரசாங்கம் போன்று, தடையை ஏற்படுத்தியோ நினைவுநாளை அனுஸ்டிப்பதனை தடுத்தாலோ, நல்லாட்சியின் முகத்திரை கிழியும்’ என, வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் கடந்த சனிக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,

‘எமது விடுதலைப் போராட்டத்தின் தியாகங்கள், அர்ப்பணிப்புக்களால் தான், எமது பிரச்சினையானது, சர்வதேச சமூகத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. எனவே, எமது உரிமைக்காக போராடி மடிந்தவர்களின் நினைவு நாளினை, ஆத்மார்த்த ரீதியாக அனுஸ்டிப்போம்.

எதிர்வரும் 27ஆம் திகதிக்கு அமைந்த மாவீரர் நாளை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், காலை 9.30 மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த உள்ளோம். அந்நேரத்தில், மாவீரர் குடும்பத்தவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டு, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கோருகிறேன்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி தாருங்கள் என, நாம் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. கொல்லப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை பெரும்பான்மையின மக்களுக்கு உண்டு எனில், எமது உரிமைக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை, தமிழ் மக்களுக்கும் உண்டு’ , மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் நிபந்தனை விதிக்க வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

‘தமிழ் தேசிய கூட்டமைப்பினர், அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் போது, நிபந்தனைகளை விதித்து ஆதரவு வழங்க வேண்டும். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அவ்வாறு செய்வதில்லை. தற்போது கூட, பட்ஜெட்டுக்கு ஆதரவு வழங்கும் போது, மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனும் நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியிருக்கலாம். ஆனால் அவர்கள், அவ்வாறு செய்வதில்லை. அதற்கு அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கை கூட காரணமாக இருக்கலாம்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாவீரர் நாளினை, மாவீரர் துயிலும் இல்லங்களில் அனுஸ்டிக்க நாம் தயார். அதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டுவர வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முன்வர வேண்டும். அவ்வாறு மக்கள் ஒன்று திரண்டால், நாம் மாவீரர் தினத்தை துயிலும் இல்லங்களில் அனுஸ்டிக்க தயார்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts