Ad Widget

உண்மைகளைக் கண்டறிவதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்!

“இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. உண்மைகள் கண்டறியப்படுவதன் ஊடாகவே இந்தத் தீர்வை எட்ட முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே, தற்போதுள்ள அரசு உண்மையைக் கண்டறிந்து, சர்வதேசத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.” – இவ்வாறு தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

sampanthan

“இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தென்னாபிரிக்காவின் அனுசரணையுடன் இங்கு முன்னெடுக்கப்படவுள்ள நல்லிணக்க முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம். தென்னாபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்க இலங்கையின் புதிய அரசுடன் ஆக்கபூர்வமான – அர்த்தமுள்ள பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளது.

ஆனால், உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இதற்கு தென்னாபிரிக்கா, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்” “இறுதிப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐ.நாவின் சர்வதேச விசாரணை அறிக்கையை தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். உண்மைகள் வெளியில் வரவேண்டும் என்பதிலும். தமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதிலும் தமிழ் மக்கள் உறுதியாகவுள்ளனர்” என்றார்.

இலங்கை அரசு, தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஒத்த நடவடிக்கைகளை இங்கு முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ரமபோஷ அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தந்து பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இந்த நிலையில் அதற்கு முன்னோடியாக தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியா தலைமையிலான குழுவினர் கொழும்புக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் அரச தரப்பு அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர். கொழும்பு – தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியிடம் வினவியபோதே மேற்படி விடயங்களை தாம் தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் எடுத்துரைத்தோம் என்று கூறினார்.

Related Posts