Ad Widget

உடனடி தீர்வு இல்லையேல் உண்ணாவிரதத்தில் குதிப்போம் : சுகாதார தொண்டர்கள்

யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முதல் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்னால் முன்னெடுத்தனர்.

1998 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய பின்னர் 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் சமூக சுகாதார பணியாளர்களாக 232 பேர் 6000 ரூபா சம்பளத்துடன் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கான நிரந்தர நியமனம் இன்னமும் வழங்கப்படவில்லை.

யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் 127 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டபோதும் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் எங்களுக்கு ஏன் இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்று சுகாதார பணியாளர்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.

நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று கூறுகிறார்கள் தவிர உறுதியான முடிவு இன்னமும் எட்டப்படவில்லை. உங்களது பெயர் பட்டியல் அனுப்பியிருக்கிறோம் நிரந்தர நியமனத்திற்குள் உங்களை தான் உள்வாங்குவோம். ஆகவே யாருடைய பேச்சுக்ளையும் கேட்டு போராட்டங்களில் ஈடுபடாதீர்கள். என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சுகாதார தொண்டர்கள் எமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவீர்கள் என உறுதியாக எழுத்து மூலத்தில் தந்தால் மட்டுமே இந்தப் போரட்டத்தை கைவிடுவோம். இல்லையேல் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அத்துமீறினால் உண்ணாவிரதத்திலும் குதிக்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Posts