Ad Widget

ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் கொலைசெய்யப்படுகின்றனர்: சிவாஜிலிங்கம்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் அவர்களின் உயிரைப் பறிப்பதை இனவெறி தாக்குதலாகவே பார்க்க முடியுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஈழத் தமிழ் மீனவர்களையும் தமிழக மீனவர்களையும் நடுக்கடலில் மோதவிடும் சதியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதெனவும், குறிப்பாக கச்சத்தீவு திருவிழா நெருங்கும் இவ்வேளையில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பதற்ற சூழலை ஏற்படுத்தும் என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களை படுகொலை செய்ததைப் போன்றே இந்திய மீனவர்களையும் இலங்கை படையினர் கொலைசெய்வதாக குறிப்பிட்ட சிவாஜிலிங்கம், இந் நடவடிக்கைக்கு எதிராக இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலேயே தமிழக மீனவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அதனை கடற்படை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts