Ad Widget

இளம் குடும்பஸ்தா் குத்திக்கொலை

யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த இளம்குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை(20) இரவு 11 மணியளவில் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தை சேர்ந்த ம.சுஜந்தன் (வயது 28) என்பவர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி எஸ்.தனுசியா (வயது 25) என்பவர் படுகாயமடைந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட ஆயுதக்குழு, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்தை மேற்கொண்டுள்ளது. இதில் கூலித்தொழிலாளியான குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்தார்.

இவர்களது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் உடனடியாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு தொடர்புகொண்டு கூறியபோது, பொலிஸார் வாகன வசதி இன்மையால் அவ்விடத்துக்கு உடனடியாக வரமுடியவில்லையென தெரிவித்ததுடன், புதன்கிழமை (21) காலையிலேயே சம்பவ இடத்துக்கு சென்றதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Posts