Ad Widget

இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் இருந்து தப்பிக்க வேண்டாம்!

இல்லாதவர்களைக் குற்றவாளிகள் ஆக்கி வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்க வேண்டாம். – இவ்வாறு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்குச் சுட்டிக் காட்டியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

வடக்கில் போதைப் பொருள் பாவனை, அதனூடான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் வடக்கு மாகாண முதலமைச்சரும் கலந்துகொண்டார். இதன்போது வடக்கு மாகாணத்தில் வருமானம் ஈட்டத்தக்க வகையில் பயங்கரவாதிகள் முன்னர் போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்திருந்தனர். அத்தகைய நடவடிக்கைகளை இப்போது முன்னாள் புலிகள் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாகவே வடபகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கின்றது என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனை மறுத்த வடக்கு மாகாண முதலமைச்சர், போருக்குப் பின்னரே வடபகுதியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. இல்லாதவர்கள் மீது குற்றஞ்சுமத்துவதன்மூலம் அத்தகைய குற்றங்களைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் பின்நிற்கிறார்களா என்ற சந்தேகத்தையே உருவாக்கிறது. தமிழகத்திலிருந்து கடல் வழியாக கட்டுப்பாடற்ற வகையில் கேரளக் கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இவற்றைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றுக் காரணம் கண்டுபிடித்து இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி அதிலிருந்து தப்பிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

Related Posts