Ad Widget

இலங்கை முதலீட்டு மாநாடு – 2021 இரண்டாவது தின ஆரம்ப நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய உரை

“முதலீட்டு சபை, கொழும்பு பங்குச்சந்தை மற்றும் இலங்கை வர்த்தக சபை ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள, இணையத்தினூடாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இதனை காலத்திற்கு உகந்ததொரு நடவடிக்கையாக நாம் கருதுகின்றோம்.

2006 முதல் 2014 வரையான 9 ஆண்டு காலத்தில் நமது நாடு அபிவிருத்தியடைந்த வேகத்தை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அக்காலத்தில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 பில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 79 பில்லியன் வரை வேகமாக அதிகரிக்க எம்மால் முடிந்தது.

ஆனால் பின்னர் 2015 முதல் 2019 வரையிலான 5 ஆண்டுகளில், எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மாத்திரமே அதிகரித்தது. எனவே, நம் நாட்டில் பொருளாதார நன்மைகளின் வளர்ச்சி தடைபட்டது. புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டது.

2020ஆம் ஆண்டில், நாங்கள் மீண்டும் அரசாங்கத்தை கையகப்படுத்திய பின்னர், உலகம் முழுவதையும் சூழ்ந்த கொவிட் தொற்றை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கொவிட் அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க நாங்கள் 66 நாட்களுக்கு முழு நாட்டையும் மூட வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த வணிகத் துறையும் கடுமையான சவால்களை எதிர்கொண்டது.

இதன் விளைவாக, உலகின் பிற பகுதிகளிலும் நிகழ்ந்ததைப் போல நம் நாடும் பின்னோக்கி சென்றதுடன், 2020 ஆம் ஆண்டில், பொருளாதாரம் 3.6 சதவிகிதம் சுருங்கியது. இதன் விளைவாக, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 80 பில்லியன் அமெரிக்க டொலர்களாக சரிந்தது.

எனினும், எமது மக்களின் வாழ்க்கை நிலையை திருப்திகரமான மட்டத்தில் பேண எமது அரசாங்கத்திற்கு முடிந்தது.

ஒரு நாடு என்ற வகையில், இந்த தீவிரமான சூழ்நிலையை நாம் தொடர்ந்து எதிர்கொண்டு, நம் நாட்டை மீண்டும் ஒரு துடிப்பான பணியிடமாக மாற்ற வேண்டும். நாம் இதுவரை ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி, ‘அனைவருக்கும் நீர்’ மற்றும் புதிய அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் போன்ற நாடு தழுவிய திட்டங்கள் மூலம் பொருளாதார ரீதியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றோம்.

வணிக நடவடிக்கைகளை எளிதாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த தொழில்துறை வலயம் ஊடாக புதிய தொழில்களைத் தொடங்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம். மருந்து பொருட்கள் உள்ளிட்ட புதிய தொழில்துறை வலயங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு தேவையான சட்ட கட்டமைப்பை வகுத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார காரணிகளை சரியான திசையில் கொண்டு செல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன்படி, இப்போது நம் நாடு மீண்டும் 6 சதவீத வளர்ச்சி விகிதத்தை தாண்டிய பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்.

இதற்கு மூலதன முதலீட்டை குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனை விரிவாக்குவதற்கும் அதிக முதலீடு தேவை என்பதையும் நாங்கள் அறிவோம். இதற்கான அரசாங்கத்தின் மூலதன செலவுத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம். இதேவேளை, முதலீட்டை அதிகரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க எதிர்பார்க்கிறது.

அதன்படி, 2020 நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எங்கள் இறுதி வரவு செலவு திட்டத்தில் படகு கட்டுதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற தெரிவுசெய்யப்பட்ட துறைகளில் முதலீட்டாளர்களுக்கு புதிய வரிவிலக்கு, நிதி மற்றும் நிதி அல்லாத சலுகைகளை நாம் அறிமுகப்படுத்தினோம். அவை அனைத்தையும் மிக விரைவில் செயல்படுத்த நாங்கள் இப்போது பணியாற்றி வருகிறோம்.

இதேவேளை, புதிய துறைமுக நகரை மையமாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை நாட்டிற்குள் ஈர்க்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதற்கு தேவையான சட்ட மற்றும் வணிக வசதி கட்டமைப்பை ஒரு புதிய சட்டத்தில் நிறுவியுள்ளோம். இதன்மூலம், கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் கூட, நம் நாட்டில் ஒரு திருப்புமுனையை நாம் ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். புதிய சட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் அனைத்து சேவைகளையும் ஒரே சாளரத்தில் இருந்து அணுக முடியும், மேலும் உலகெங்கிலும் உள்ள சிறந்த முதலீட்டாளர்களை நம் நாட்டிற்குள் நுழைய ஊக்குவிப்பதே எமது எதிர்பார்;ப்பாகும்.

இன்று கடன் வாங்குவதற்கு பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணி வருவாயை இலக்காகக் கொண்டு நாம் செயற்பட வேண்டும்.

இவற்றில், தனியார் பங்கு விற்பனை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பத்திரங்களின் வளர்ச்சி, கடன் கருவிகளின் செயல்திறன், புதிய துணிகர மூலதனத்தின் ஊக்குவிப்பு இதுபோன்ற திட்டங்களுக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.

அதற்காக, புதிய வணிக நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டிலிருந்து பெறும் முதலீடுகளுக்கான பின்னணியை தயார்ப்படுத்தியுள்ளோம்.

இதற்கிடையில், தொற்றுநோய்க்கு மத்தியிலும் கொழும்பு பங்குச் சந்தையின் சமீபத்திய செயற்பாடு குறித்து மகிழ்ச்சியடையலாம்.

தனியார் துறையில் முதலீட்டாளர்களுக்கு ஆர்வத்தை வெளிகாட்டக்கூடிய பல குறிப்பிட்ட முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நான் ஏற்கனவே விவரித்தேன்.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் அரசு நிறுவனங்களுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரைவுபடுத்த நீங்கள் அனைவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நாம் நம்புகிறோம்.”

Related Posts