இலங்கை பொலிஸார் குற்றவியல் கைதிகளை வழமையாகவே சித்திரவதை செய்து, முறையற்ற வகையில் நடத்துகின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது.
இது குறித்து அந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பொலிஸ் அமைப்பை கண்காணிக்க ஒரு சுயாதீன அமைப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் பொலிஸாரின் துஷ்பிரயோகங்களை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டிருக்கிறது.
குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை பெறுவதற்கான ஒரு சாதாரண வழியாக இலங்கை பொலிஸார் சித்ரவதைகளை பயன்படுத்துகின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்பக இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைக்கான ஆய்வுகளை தலைநகர் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் நடத்தியது.
இந்த அமைப்பின் முன்னைய அறிக்கைகள் போர் சார்ந்த துஷ்பிரயோகங்களை பற்றியே குறிப்பிட்டிருந்தன. அதில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனுபவித்த பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
ஆனால் இந்த புதிய அறிக்கை சிங்கள சமூக மக்களும் பொலிஸாரால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்கிறது. இலங்கை பொலிஸாரின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே இந்த விடயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறும், தமிழ் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சுந்தரம் மகேந்திரன், அதற்கான விழிப்புணர்வு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் – என்றார்.