இலங்கையில் சட்டத்துறைக்கு சட்டத்தரணிகளை உருவாக்கி வரும் 152 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பெருமைமிக்க இலங்கை சட்டக் கல்லூரி, நவீன சட்டக் கல்வியை நோக்கி மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS), மாணவர் மேலாண்மை அமைப்பு (SMS) மற்றும் புதிய திருத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவற்றின் அறிமுக விழா நேற்று மாலை சட்டக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்விப் பேரவையின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், இலங்கையின் கௌரவ பிரதம நீதியரசர் நீதியரசர் பி. பத்மன் சூரசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன், நீதி அமைச்சு, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகியவற்றின் ஒத்துழைப்பில் நடைமுறைப்படுத்தப்படும் “நீதிக்கான ஆதரவுத் திட்டத்தின்” கீழ் இந்த டிஜிட்டல் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிகழ்வில் சட்டக் கல்லூரியின் முதல்வர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசந்த லால் டி அல்விஸ் வரவேற்புரையாற்றியதுடன், UNDP-யின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மரினா டென் சிறப்புரையாற்றினார். மேலும், சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் பயணத்தை வெளிப்படுத்தும் காணொளி காட்சிப்படுத்தப்பட்டதுடன், புதிய பாடத்திட்டம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான விளக்கக்காட்சியும் இடம்பெற்றது.
பிரதம நீதியரசர் தனது உரையில், சமகால சட்டக் கல்வியுடன் நவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இந்த மாற்றம் எதிர்கால சட்டத்துறைக்கு பெரும் பலனளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதுவரை 48,000க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளை நாட்டிற்கு வழங்கியுள்ள இலங்கை சட்டக் கல்லூரி, இந்த டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பாடத்திட்ட சீர்திருத்தத்தின் மூலம் உலகத் தரத்திலான சட்டக் கல்வியை நோக்கிய புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.