Ad Widget

இலங்கை இராணுவத்தினரால் கூட்டமைப்பு வேட்பாளர்களான ஆனந்தி, சயந்தனுக்கு அச்சுறுத்தல்

suresh-peramachchantheranவட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேட்பாளர்கள் நேற்று இலங்கை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர்களான சாவகச்சேரியை சேர்ந்த சட்டவாளர் சயந்தன் மற்றும் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர், அவர்களின் அரசியல் செயற்பாடுகள் குறித்து நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,

இது ஒரு தேர்தல் விதிமுறை மீறலாகும்.

இலங்கை இராணுவத்தினரின் எந்தத் தலையீடுகளும் இன்றி, வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடத்தப்படும் என்று, ததேகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிபர் உறுதியளித்திருந்தார்.

இருந்த போதிலும், அதற்கு முரணான வகையில்,வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட அன்றைய தினமே இராணுவத்தினர் வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

இது நீதி நியாயமற்ற செயலாகும்.

இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கும், ஜனாதிபதிக்கும் முறைப்பாடு செய்யப்படும்.

அத்துடன் இந்த விவகாரம் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோருக்கான ஆணைக்குழு சர்வதேசத்தை ஏமாற்றும் செயல்

இலங்கையின் போரின் போது காணாமல் போனோர் தொடர்பாக ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் அமைக்கவுள்ளமையை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

இது எதிர்வரும் மாதத்தில் இலங்கைக்கு வருகைத்தரும் ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை திருப்திபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியின் செயலாளரது தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாகியும் அது இயங்கவில்லை.

இந்தநிலையில் அதே ஜனாதிபதியின் செயலாளரால் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு அமையவுள்ளமை சர்வதேசத்தை ஏமாற்றும் செயல் என்று பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts