Ad Widget

இலங்கை அரசின் சொற்கள் செயல்களாக மாறவேண்டும் – டேவிட் கேமரன்

இலங்கையின் புதிய ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞைகளை வரவேற்பதாக தெரிவித்திருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், ஜனாதிபதியின் அறிவிப்புக்கள் அனைத்தும் வாய்வார்த்தைகள் என்பதைத் தாண்டி செயல்களாக மாறுவதைக் காணவே பிரிட்டன் விரும்புகிறது என்று கூறியிருக்கிறார்.

david_cameron_maithripala_sirisena

காமன்வெல்த் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்திருக்கும் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனவை செவ்வாய்க்கிழமை தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வரவேற்று உபசரித்துப்பேசிய டேவிட் கேமரன், புதிய அதிபர் மீது பிரிட்டன் நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார். இலங்கைக்குள் இருக்கும் தமிழர்கள் தொடர்பாக புதிய ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தமக்கு அந்த நம்பிக்கையை அளிப்பதாக கூறினார்.

மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஜனாதிபதியின் முன்முயற்சிகளை பிரிட்டன் ஆதரிப்பதாக தெரிவித்த கேமரன், மறுசீரமைப்பு, ஊழல் ஒழிப்பு, பிரிந்துகிடந்த இலங்கையை ஒன்றாக்குவதற்கான முயற்சிகள் என புதிய அரசின் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் கூறினார்.

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் பயன்பாட்டுக்கு எடுக்கப்பட்டிருந்த நிலத்தில் ஒரு பகுதி தமிழர்களுக்கு திருப்பித் தரப்படுவது, சிவில் நிர்வாகத்தில் இருந்து இராணுவமயமாக்கலை அகற்றும் நோக்கில் ஆளுநர்களாக இருந்த இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதில் சிவிலியன்களை ஆளுநர்களாக நியமித்திருப்பது, மீள்குடியேற்றத்துறைக்கு தமிழர் ஒருவரையே அமைச்சராக நியமித்திருப்பது போன்ற நவடிக்கைகளை இணைத்துப் பார்க்கும்போது இவை நல்ல ஆரம்பம் என்று தாம் கருதுவதாக கேமரன் தெரிவித்தார்.

இலங்கையின் மீள் குடியேற்றம் மற்றும் இணக்கப்பாடு தொடர்பிலான இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் புதிய ஜனாதிபதி முன்னெடுக்கவேண்டும் என்று கூறிய கேமரன், அதற்குத்தேவையான ஒத்துழைப்பை பிரிட்டன் வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

இலங்கையுடன் பிரிட்டனுக்கு வரலாற்று ரீதியாக வலுவான உறவு நீடிப்பதாக தெரிவித்த கேமரன், புதிய ஜனாதிபதி தனது மறுசீரமைப்பு நடவடிக்கைகள், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்துவது போன்ற தனது முன்னெடுப்புக்களை தொடர்வார் என்று நம்பிக்கை வெளியிட்டார். அதற்கான அனைத்து உதவிகளையும் பிரிட்டன் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

முன்னதாக லண்டனில் இருந்து வெளியாகும் தமிழ் கார்டியன் பத்திரிக்கையில் தனிக்கட்டுரை ஒன்றை எழுதியிருந்த கேமரன், இலங்கையின் போர்குற்றங்கள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை ஏற்கவைப்பதிலும், தற்கால மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்துவதிலும் பிரிட்டன் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை திட்டமிட்டபடி இந்த மாதம் வெளியிடப்படாமை தொடர்பில் தமிழர்களின் கோபத்தை தாமும் பகிந்துகொள்வதாகவும் கேமரன் கூறியிருந்தார்.

அதேசமயம், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் வரை ஒத்திப்போடப்பட்டிருப்பதன் விளைவாக, இலங்கையின் புதிய அரசாங்கம் ஐநாமன்றத்துடன் பேசவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகத்தன்மை மிக்க உள்ளக விசாரணையை ஏற்படுத்தவும் இலங்கை அரசுக்கு வாய்ப்பு கிட்டியிருப்பதகாவும் கேமரன் தெரிவித்தார்.

ஐநா மன்றத்தின் மனித உரிமைக்கவுன்சிலில் செப்டம்பர் மாதம் இலங்கை தொடர்பான ஆய்வறிக்கை கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்ட கேமரன், அடுத்த ஆறுமாதங்கள் கழித்து மீண்டும் உலகின் கவனம் இலங்கைமீது படியும் என்றும் அப்போது இலங்கையானது தனது கடந்தகாலத்தை எதிர்கொள்ளக்கூடிய நாடாகவும், தனது மாறுபாடுகளை மறந்து தன்னை மறுசீரமைத்துக்கொள்வதன் மூலம் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யக்கூடிய நாடாகவும் இருக்கவேண்டும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Posts