Ad Widget

இலங்கை அணி இலகு வெற்றி!

இலங்கை,சிம்பாப்வே,மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று ஹாராரேவில் இலங்கை- சிம்பாப்வே அணிகள் இடையில் நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கொண்டது.

255019

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கா களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஆரம்பம் முதலே இலங்கை அணியின்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியமையால் அவர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் சிம்பாப்வே அணியினர் தடுமாறி வந்தனர்.

இந்நிலையில் அந்த அணி 41.3 ஓவரில் 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிக்கொடுத்தது.

அந்த அணி சார்பில் பீட்டர் மோர் அதிகபட்சமாக 47 ஓட்டங்களும், அணித்தலைவர் கிரிமர் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.

இலங்கை அணி தரப்பில்,குணரத்னே 3 விக்கெட்டுகளும், குலசேகரா, சுரங்க லக்மல், நுவன் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் தமக்கிடையே பகிர்ந்துக் கொண்டனர்.

155 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியின் சார்பாக தொடக்க வீரர் குஷால் பெரேரா (21) களத்தில் நிலைக்கவில்லை. அடுத்து வந்த நிரோஷன் டிவெல்ல (41) நிதானமாக ஆடி ஓட்டங்கள் குவித்தார்.

மற்றொரு தொடக்க வீரர் களமிறங்கிய தனஞ்சய டி சில்வா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

இவரின் அபாரமான துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி 24.3 ஓவரிலே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தனஞ்சய டி சில்வா 78 ஓட்டங்களும், குஷால் மெண்டிஸ் 12 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்த தொடரில் நாளை இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர் கொள்ளவுள்ளது.

Related Posts