Ad Widget

இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற கண் பரிசோதனை மாத்திரம் போதுமானது – ஜனாதிபதி

இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு கண் பரிசோதனை மாத்திரம் மேற்கொள்ளுதல் போதுமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

பயணிகள் போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று பிற்பகல் கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கண் பரிசோதனையை வைத்தியசாலைகளில் மேற்கொள்வது குறித்து ஆராய இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு மாத்திரமே பூரண மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வரையறுக்குமாறு ஜனாதிபதி இன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவற்றில் காணப்படும் சிக்கல்களை மிகவும் குறுகிய காலத்திற்குள் தீர்ப்பதனூடாக மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு அர்ப்பணிக்குமாறு போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாளாந்த வாழ்க்கையைக் கொண்டுசெல்வதற்கு முக்கியமாக காணப்படக்கூடிய அரச நிறுவனங்களில் நிலவும் மோசடிகளை ஆராய்ந்து, அதனுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் கொண்டுசெல்வதற்கு புலனாய்வுப் பிரிவினருக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கும் தாம் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர் ஒருவர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவாராயின், தகுதி தராதரம் பார்க்காது அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவ்வாறானவர்கள் மீண்டும் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் வாங்குவோரை மாத்திரமின்றி, அதனை வழங்குவோரையும் சட்டத்திற்கு முன்னிலையில் ஆஜர்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Related Posts