Ad Widget

இறைவி விவகாரம்… கார்த்திக் சுப்பராஜுக்கு தடை

இறைவி படத்தில் தயாரிப்பாளர்களை அவமதித்து விட்டதாகக் கூறி, இனி படங்கள் இயக்க கார்த்திக் சுப்பராஜுக்கு தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

karthic-supr-raj

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் இறைவி. இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. அதே நேரம் கலவையான விமர்சனங்களும் வந்தன. இந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கார்த்திக் சுப்பராஜே எதிர்ப்பாராத ஒரு அதிர்ச்சி இடி விழுந்தது.

படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அதில் பல காட்சிகள் தயாரிப்பாளர்களுக்கு எதிராக இருப்பதாகவும், தமிழுக்காக குரல் கொடுப்போருக்கு எதிராக உள்ளதாகவும் கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களும் படத்துக்கு எதிராக அணி திரண்டனர். இதனால் படத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு கேட்டுக் கொண்டார்.

அடுத்த நாள் சனிக்கிழமை ஆர்கேவி தியேட்டரில் இறைவி சிறப்புக் காட்சி போடப்பட்டது. 150க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இந்தக் காட்சியைப் பார்த்தனர்.

இவர்களில் ஒரு குழுவினர் படத்தில் எந்தெந்த காட்சிகள் தயாரிப்பாளர்களை அவமதிக்கும்படி உள்ளன என்று பட்டியலிட்டனர். இதைத் தொடர்ந்து இன்று தயாரிப்பாளர்கள் மீண்டும் சங்கக் கட்டடத்தில் கூடிப் பேசினர். இறுதியில், ‘கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பாளர்களை மிகவும் அவமதித்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இனி அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைக்காது. எந்தத் தயாரிப்பாளரும் அவரை வைத்துப் படம் இயக்கக் கூடாது. அவர் மன்னிப்பு கேட்டாலும் கூட இந்த தடையை விலக்கும் யோசனை இல்லை,” என்று ஒருமனதாகத் தீர்மானித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். மேலும், இறைவி படத்தால் ஏற்படும் நஷ்டத்தை கார்த்திக் சுப்பராஜ்தான் தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தரவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Related Posts