Ad Widget

இறந்த குழந்தை மீண்டதாம்; மானிப்பாயில் பரபரப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் இறந்த குழந்தை ஒன்று மீண்டும் உயிருடன் மீண்டதாக கூறப்படும் சம்பவத்தால் மானிப்பாயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மானிப்பாய் புதுமடம் பகுதியில் 9 மாதக் குழந்தை ஒன்று கடந்த 27 நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் குறித்த குழந்தை இறந்து விட்டதாக நேற்று வைத்தியர்கள் அறிவித்தனர்.

இதனை அடுத்து குழந்தையின் இறுதிக் கிரியைகளை பெற்றோர் நடத்திக் கொண்டிருந்த போது குழந்தையின் உடலில் அசைவை அவதானித்தனர் இதனை அடுத்து தமது

குழந்தை உயிரோடு இருப்பதாக எண்ணிய பெற்றோர் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு குழந்தையை எடுத்து சென்றனர்.

அங்கு குறித்த குழந்தை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு ஒரு மணிநேரத்தின் பின்னர் அது இறந்த விடயம் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

இதன்போது குழந்தையின் உடலை சவச்சாலைக்கு போட முயன்ற போது அதனை பலவந்தமாக பறித்த பெற்றோர், குழந்தையின் உடலுடன் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிசார் அவர்களை தேடி வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இறந்த குழந்தை மீண்டதாக பரவிய செய்தியால் மானிப்பாய் பகுதியிலும், வைத்தியசாலை வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts