Ad Widget

இரு கோவில்களின் விக்கிரகங்கள் மணலினுள் புதைப்பு

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரக்கர் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள அகோரமாரியம்மன் கோவிலிலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள பழம்பெரும் பிள்ளையார் கோவிலிலும் இருந்த விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் தகர்த்து எடுக்கப்பட்டு அவ்விக்கிரகங்கள் தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, பிள்ளையார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள நாகதம்பிரான் கோவிலில் இருந்த நாகதம்பிரானின் ஏழு வெண்கலச் சிலைகளையும் அங்கிருந்து அகற்றி வெளியில் குவிக்கப்பட்டு போடப்பட்டுள்ளதுடன், அதன் நடுவே பேனா ஒன்றும் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வழமை போன்று நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை பூஜை செய்வதற்காக கோவில் நிர்வாகத்தினர் நுழைவாயில் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதை அவதானித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கோவில்களிலும் சூழ வைக்கப்பட்டுள்ள ஒன்பது விக்கிரகங்களில் ஏழு விக்கிரகங்கள் தகர்த்து எடுக்கப்பட்டு மணலினுள் தலைகீழாக புதைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அக்கோவில்களில் வைக்கப்பட்டிருந்த சுவாமிப் படங்களும் எடுக்கப்பட்டு மணலினுள் புதைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு புதைக்கப்பட்ட இடத்தில் மண்மேடு ஆக்கப்பட்டு அதில் தமிழ் எழுத்துகள் சரியாகப் புரியாத வகையில் எழுதப்பட்டுள்ளதுடன், 999 என்று ஒன்பது தடவைகள் மணலில் எழுதப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரார்ட் அதாவது ஆரம்பம் எனவும் எழுதப்பட்டுள்ளது

அகோரமாரியம்மன் கோவிலுக்கு முன்பாகவிருந்த பெரிய திரிசூலம் தகர்க்கப்பட்டு விழுத்தப்பட்டுள்ளது. கோவில் மூலஸ்தானக் கதவைத் தகர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்ட போதிலும், அது கைகூடாததை அடுத்து அக்கதவு கொத்தப்பட்டுள்ளது. திரைச்சீலையும்; பெரிய குத்துவிளக்குகளும் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட தடவியல் பிரிவு மற்றும் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடத்தி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts