Ad Widget

இரா. சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் எழுதியுள்ள உறுக்கமான கடிதம்

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பி கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை மக்கள் இயக்கம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கைதிகள் விடயத்தில் சரியான தீர்மானத்தினை முழுமையாக எடுப்பீர்கள் என்ற நம்பிகையில் தான் கடந்த காலத்தில் கைதிகளினால் முன்னெடுத்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததை தாங்கள் அறிவீர்கள்.

ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வினை முன்வைப்பதாக என்னிடம் கூறியிருக்கின்றார். அதனடிப்படையில் என்னை நம்புங்கள் என்று கூறியிருந்தீர்கள்.

2015 ஒக்டோபர் 17 ஆம் திகதி கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாதைமை குறித்து மிகுந்த மன வேதனை அடைகின்றோம்.

இரண்டாவது தடவை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, புனர்வாழ்வு அளிக்கவுள்ளதாக கூறப்பட்டு, வாக்குறுதி வழங்கப்பட்டன.

புனர்வாழ்வு செயற்திட்டம் உரிய முறையில் துளி அளவு கூட செயற்படுத்தப்படவில்லை.

கடந்தகால யுத்தத்தில் நினைத்துப்பார்க்க முடியாத அழிவுகளை சந்தித்தவர்கள் என்ற அடிப்படையில், கைதிகள் விடுதலை என்பது ஒரு மனிதாபிமான பிரச்சினை.

இதுவரை பல்வேறு கோரிக்கைகள் போராட்டங்கள் செய்தும், மனிதாபிமான பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படவில்லை.

நல்லிணக்கம், இனஐக்கியம், புரிந்துணர்வு, அனைத்தும் வாய்ப்பேச்சினாலும், ஊடக அறிக்கையினாலும் மட்டுப்படுத்தப்படுகின்றன.

நாம் கேட்பது கைதிகளை வாழ விடுகின்ற விடயத்தில் கூட அரசு சரியான தீர்வு எடுக்கவில்லை.

கைதிகள் விடயத்தில் ஒரு இறுக்கமான ஆக்கபூர்வமான தீர்வு ஒன்று முன்னெடுக்கவில்லை என்ற சந்தேகதம் தமிழ் மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகின்றது.

நீண்டகால சிறை வாழ்க்கை, துன்பம், இளமைக் காலத்தினை இழந்தது போன்ற பல்வேறு துன்பங்களுக்கும் விடிவு கிடைக்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்தி ஏமாற்றும் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட பலருக்கு உயர் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்வதும், குழுக்கள் அமைப்பதும், விசேட நீதிமன்றம் அமைப்பதும் எம்மை ஏமாற்றும் செயற்திட்டம். அது காலம் கடந்த ஞானம்.

புனர்வாழ்வு காலத்தினை இழுத்தடிக்கும் போக்கினை கைவிட்டு, வாக்குறுதி தந்து ஏமாற்றும் செயற்பாட்டினை கைவிட வேண்டும். புனர்வாழ்வு விடயத்தினை அரசு நிறைவேற்ற வேண்டும்.

சட்டமா அதிபர் திணைக்களம் இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது. அரசியல் கைதிகளின் வழக்கினை குறுகிய காலத்தில் அரசு முடித்து புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்ய முடியும்.

எனவே, மீண்டும் ஒரு உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்க எமக்கு விருப்பம் இல்லை. வேதனை வலி, நிறைந்த போராட்டம். வேறு வழி இல்லை.

சரியான தீர்மானம் ஒன்று தேவை. அரசுடன் பேசி விரைவாக முடிவு ஒன்றினை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆசை தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே.

அப்போதுதான் உண்மை, நல்லிணக்கம், இன ஐக்கியம் ஏற்படும் என்பது உண்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts